|
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 78,308 ஏக்கரில் வறட்சியின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம், 25.3 கோடி பட்டுவாடா செய்யப்படுகிறது. தமிழகத்தில், சென்னை தவிர மற்ற, 31 மாவட்டங்கள் வறட்சியால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அரசு அறிவித்தது. வறட்சி நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில், வேளாண் துறை, வருவாய் துறையைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வறட்சி குறித்து முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நேரடியாக வங்கி கணக்கின் மூலமாக உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் வறட்சி குறித்த கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் வறட்சி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிவாரணம் வழங்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், கோடை காலங்களில் ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், பவானிசாகர், சத்தி, தாளவாடி ஆகிய யூனியன்கள் அதிகமான வறட்சிக்கு இலக்காகி உள்ளன. இப்பகுதியில், நெல், கரும்பு, தீவனச்சோளம், ராகி, நிலக்கடலை, எள், ஆமணக்கு, துவரை, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, மரவள்ளிக்கிழங்கு ஆகியவை பயிரிடப்படுகிறது. ஆறு தாலுகாவிலும், 78,308 ஏக்கர் விவசாய பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், மானாவாரி பயிர்கள், மழைகால பயிர்கள், நீர்பாசனப் பயிர்கள் என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டது. வறட்சியில், 25,769 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசிடம் நிவாரண நிதி உதவிப்பெற்று, 25 கோடியே, 27 லட்சத்து, 46 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை வங்கிகள் மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக வங்கிக்கு சென்று, தங்களது கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். மாவட்டத்தில், ஒன்பது தென்னை மரங்களுக்கு மட்டுமே வறட்சி நிவாரணமாக, 1,480 வழங்கப்பட்டுள்ளது. மேலும், வறட்சியால் விடுப்பட்ட இடங்களை இரண்டாம் கட்டமாக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
|