|
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்துக்கான மதிப்பிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ரூ.120 கோடியில் இப்பணிகள் நடக்க, அரசின் ஒப்புதலுக்கு திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த, 2007ல், 209 கோடி ரூபாயில் இப்பணிகள் துவங்கியது. ஐந்து பேக்கேஜ்களாக இப்பணிகள் நடந்து வருகிறது. இதில், முதல் பேக்கேஜ், 40 சதவீதமும், 2, 3, 4ம் பேக்கேஜ்கள், 90 சதவீதமும், ஐந்தாவது பேக்கேஜ், 90 சதவீதமும் பணிகள் முடிந்துள்ளது. ஐந்தாவது பேக்கேஜில் ஈரோடு கீழமேட்டில், கழிவுநீருக்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பணி மிக விரைவாக நடந்து முடிந்துள்ளது. முதல் பேக்கேஜில் நந்தி நகர், வாட்டார் ஒர்க்ஸ் ரோடு போன்ற பகுதியில் உள்ளவர்கள், நீதிமன்றத்தை அணுகியதால், இப்பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள், ஈரோடு நகரம் மற்றும் சூரம்பட்டி பகுதியில் நடக்கிறது. அடுத்த மூன்றாண்டுக்குள் இப்பணிகள் முழுமையாக முடியும். இதற்கிடையில், இரண்டாம் கட்டப்பணிகளுக்கு மதிப்பீடு செய்வதற்கான பணி துவங்கி உள்ளது. இதில், 200 கிலோ மீட்டர் அளவுக்கு பைப்லைன் போடப்படும். ஈரோடு மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதியில், இரண்டாம் கட்டப்பணி நடக்கும். இதன் மதிப்பீடு, 120 கோடி ரூபாயாகும். இத்திட்டத்தின் கீழ், 2,000 முதல், 10,000 ரூபாய் வரை பொதுமக்களின் வீடு, வணிக வளாகம், கட்டிடங்களில் இருந்து வசூலித்து, 61 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, ஆறு கோடி ரூபாய் வரை மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டுக்கு அனுமதி, குடிநீர் இணைப்பு போன்ற வரி இனங்களுக்கு வருவோரிடம் இத்தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்தபின், மாதம், 100 ரூபாய் உபயோகிப்பாளர் கட்டணம் ஒவ்வொரு கட்டிடங்களில் இருந்தும் வசூலிக்கப்படும். இத்தொகை கழிவு நீர் அகற்றல், பாதுகாத்தல், பராமரித்தலுக்கு பயன்படுத்தப்படும். ஈரோடு மாநகராட்சியில், ஏற்கனவே, 40 ரூபாய் குடிநீர் வசதிக்காக வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில், 50 ரூபாயாக உயர்ந்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இக்கட்டணமும், தலா, 100 ரூபாயாக உயரும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
|