|
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. ஏப்ரல் மாதம், 25ம்தேதி, மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு விழா நடந்தது. விழாவின் போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக, நீதி விசாரணை கோரி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட போது ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பல்வேறு பிரிவுகளில், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், 12 நாட்களுக்கு பின், ஜாமினில் வெளியே வந்தார். அதை தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாசை, தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என, பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டது. ராமதாசுக்கு டாக்டர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அவருடைய உடல் நிலை சீரடைய இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறினர். நேற்று ராமதாசுக்கு இதய அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
|