|
நாடு முழுவதும், ரயில்களின் விபரத்தை அறிய "139' என்ற எண்ணை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ்., மூலம் தேவையான தகவல்களை பெறலாம், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் கோடிக்கணக்கானோர் பயணிக்கின்றனர். பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் புக்கிங், சுகாதாரம், இருக்கை வசதிகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ஆன்-லைன் முன்பதிவு, தட்கல் புக்கிங், சாதாரண பயண டிக்கெட், பிளாட் ஃபார்ம் டிக்கெட், புக்கிங் செய்யப்பட்ட ரயிலின் எண், பி.என்.ஆர்., ஸ்டேட்டஸ், ரயில் பயணிக்கும் நேரம், ரயில் வந்து கொண்டிருக்கும் இடம், முன்னறிவிப்புகள், ரயில்வே ஸ்டேஷனில் ஸ்கிரின் டிஸ்பிளே, தொடு திரை எனப்படும் "டட்ச் ஸ்கிரின்' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது. ரயில்வேயின் மற்ற விபரங்களை ஆன்-லைனில் பார்க்கும் வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான பயணிகளுக்கு ரயில் பற்றிய தகவல்கள் அறியாமல் உள்ளனர். அதனால், ரயிலில் பயணம் செய்வதில் பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதையடுத்து, தேசிய அளவில், 139 என்ற கட்டணத்துடன் கூடிய தொலைபேசி எண்ணை, ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. பி.எஸ்.என்.எல்., மட்டுமல்லாது எந்த நிறுவன தொலைபேசி அல்லது மொபைலில் பேசினாலும், சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளில் பயணிகள் பேசி, தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும், மொபைல் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் வசதிக்காக, பயணிகள் தங்களது டிக்கெட் எண், ரயில் எண் ஆகிய விபரங்களை மொபைலில் குறிப்பிட்டு தேவையான தகவல்களை எஸ்.எம்.எஸ்., மூலமாக உடனடியாக பெறலாம். இதுகுறித்து ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நிலைய மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: பெரும்பாலான ரயில் பயணிகள், 139 என்ற எண்ணை பயன்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளனர். தகவல் தொழில்நுட்பம் மூலமாக, தாங்கள் பயணிக்கும் ரயிலின் விபரம், நாடு முழுவதும் எந்த மாநிலத்தில், எந்த ஸ்டேஷனில், எந்த நேரம், எந்த ரயில் செல்லும் என்பது பற்றிய முழுவிபரங்களையும் எளிதாக, சில நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும். எனவே ரயில் பயணிகள், 139 என்ற எண்ணை பயன்படுத்தி பயனடைய வேண்டும், என்றார்.
|