2007ம் ஆண்டு வெளியான பில்லா படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நமீதாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். நயன் - நமீதா இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டினார்கள். நயன்தாரா அதுவரை இல்லாத அளவுக்கு டூ- பீஸ் உடையணிந்து நடித்திருந்தார். இதுவும் படத்தின் வெற்றிக்கு உதவியது. பில்லாவைத் தொடர்ந்து அஜித், ஏகன், அசல் படங்களில் நடித்தார். விஷ்ணுவர்தன் சர்வம் படத்தை இயக்கினார். இவர்களது படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் சேரப்போவதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. சர்வம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாத விஷ்ணுவர்தன், பில்லா 2க்கான கதைக்களத்தை எழுதியிருக்கிறார். அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித், விரைவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை முடித்த கையோடு மீண்டும் விஷ்ணுவர்தனுடன் பில்லா பார்ட் 2க்காக கைகோர்ப்பார் என தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|