|
சிரிக்கவே மாட்டேன் என பந்தயம் கட்டி நிற்கும் மனிதரை தோற்கடிக்க, உலகில் ஒரே வழி தான் இருக்கிறது... அவருக்கு, அரை மணி நேர நிருபர் பணி கொடுத்து, நடிகை யாரிடமாவது பேட்டி எடுக்க அனுப்ப வேண்டும்... இந்த அனுபவத்தை ஆண்டுக்கணக்கில் செய்து வருபர்கள், சிரிக்காத பந்தயத்துக்குத் தகுதியானவர் பட்டியலில் சேர்ந்துவிடுவர் என்பது வேறு விஷயம்.
சமீபத்தில் அப்படி ஒரு கிச்சுமுச்சை அரங்கேற்றினார், "முனியாண்டி மூன்றாமாண்டு விலங்கியல்' பூர்ணா. "சிலந்தி' டைரக்டர் ஆதி இயக்கும், "நரன்' படத்தில் பூர்ணா தான் ஹீரோயின். இந்தப் படத்தின் கதையைச் சொல்வதற்காக பூர்ணா பிறந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றார் ஆதி. கதையைக் கேட்பதற்கு முன்னமே, "புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன்' எனக் கூறினாராம் பூர்ணா. "ஆயிரம் மொழிகளில், லட்சம் படங்களில்' நடித்தவர் அப்படி ஒரு பதிலைச் சொன்னதால் அதிர்ந்துபோன ஆதி, "உங்கள் உறுதியை கதை நொறுக்கும்; கொஞ்சம் செவிமடுங்கள்' என கெஞ்ச, இறுதியில் பூர்ணாவின் கொள்கை பொலபொல... இத்தகவலை, பத்திரிகையாளர் சந்திப்பில் பூர்ணாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஆதி கூறினார்.
"புதுமுகங்கள் மீது எப்படி என்ன வெறுப்பு' எனக் கேட்டபோது, "புதுமுகம், பழயை முகம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை ஸ்கிரிப்ட் தான் முக்கியம். புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன் எனச் சொல்லவில்லை. கதை நன்றாக இருந்து, எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் எந்தப் படத்திலும் நடிக்கத் தயார் தான்' என்றார். நடிகையின் கொள்கைகளை, அவர்களது கால்ஷீட் டைரிதான் நிர்ணயிக்கிறது என்பது மீண்டும் ஊர்ஜிதமாகி உள்ளது. |