
முறைகேடு புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென்னின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
இதனால் மக்களவையில் திங்கள்கிழமை சென் மீது கொண்டு வர திட்டமிட்டுள்ள பதவிநீக்கத் தீர்மானம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சனிக்கிழமை காலை வழக்குரைஞர் ஒருவர் மூலம் சென் தனது கைப்பட எழுதிய ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ராஜிநாமா கடிதம் முறைப்படி அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென் ராஜிநாமா கடிதத்தை தனது சொந்த விருப்பத்தின் பேரிலும், சுயமாகவும், குடியரசுத் தலைவருக்கு முகவரியிட்டு, நேரடியாகக் கொடுத்துள்ளதால், ராஜிநாமாவுக்கு ஒப்புதல் அளித்தல் என்ற நிலைமை ஏற்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால் நேரடியாக, கைப்பட எழுதி சமர்ப்பிக்கப்பட்ட காரணத்தால் சென்னின் பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராஜிநாமா கடிதத்தை பரிசீலித்து, மேல் நடவடிக்கைக்காக நீதித்துறைக்கு அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|