ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கள்ளநோட்டு கும்பலை கைது செய்த கியூ பிரிவு போலீசார், கும்பலின் முக்கிய நபரை பிடிக்க திட்டமிட்டது தெரிந்து, முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ளநோட்டுடன் தப்பினார்.
தமிழகத்தில் சுற்றுலா ஸ்தலங்களை குறிவைத்து கள்ள நோட்டுகளை வெளி மாநில கும்பல் புழக்கத்தில் விட்டு வருகின்றன . இது தொடர்பாக கன்னியாகுமரியில் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து, 6 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ,ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ,ஏர்வாடியை சேர்ந்த தர்பார் லாட்ஜ் உரிமையாளரின் மகன் செய்யது முகம்மது அல்டாப்(25) உள்ளிட்ட சிலர் கள்ளநோட்டுகளை மாற்றுவது கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
அதன்படி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்ற செய்யது முகம்மது அல்டாப், கீழக்கரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(29) டிரைவர் செய்யது அபுதாகிர்(30) ஹீரோ ஹோண்டா பேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த சிவகுமார்(40) ஆகியோரை பிடித்து விசாரித்தில் ,"கள்ள நோட்டு மாற்றியதும் , மாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, கள்ளநோட்டை மாற்றி கிடைத்த 55 ஆயிரம் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ,"கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ள நோட்டுடன் தங்களை பார்க்க வந்து கொண்டு இருப்பதாகவும்,' தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசாரும் கைதானவர்களை கொண்டு , முக்கிய நபரிடம் மொபைல் போனில் பேசி சீக்கிரம் வரும்படி,' கூறினர். அந்த நபரோ, ""நீங்கள் போலீசிடம் மாட்டி கொண்டது தெரியும்,'' என கூறி, போனை ஆப் செய்து தப்பிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
|