பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில் இருக்கிறார் மாரடோனா. அணியின் இயக்குனர் கார்லஸ் பிலார்டோ, நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா. கடந்த 1986ல் உலககோப்பை பெற்று தந்த பெருமைமிக்கவர். 1994ல் ஓய்வு பெற்ற இவர், போதை பழக்கத்துக்கு அடிமையானார். இதிலிருந்து மீண்ட இவர், கடந்த 2008ல் அணியின் பயிற்சியாளரானார்.
சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலககோப்பை காலிறுதியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து, வெளியேறியது. இதையடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டார். இதற்கு, அணியின் இயக்குநர் கார்லஸ் பிலார்டோ தான் முக்கிய காரணம் என புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மாரடோனா அளித்த பேட்டி: நாங்கள் ஜெர்மனியிடம் வீழ்ந்த சோகத்தில் மூழ்கியிருந்தோம். அதே நேரத்தில் பிலார்டோவோ, என்னை பதவியில் இருந்து தூக்கி எறிவதில் மும்முரமாக இருந்தார். பயிற்சியாளர் என்ற முறையில் எனக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்தார்.
அர்ஜென்டினா கால்பந்து சங்க தலைவர் ஜுலியோ கிரண்டோனாவும் என்னிடம் பொய் சொல்லியுள்ளார். உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தென் ஆப்ரிக்காவில் வைத்து சந்தித்தார். அப்போது, எனது பணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு சாட்சியாக வீரர்களும் இருந்தனர். ஆனால், அர்ஜென்டினா திரும்பியதும் மாறி விட்டார். நான் பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டுமானால், எனது கீழ் பணியாற்றிய துணை பயிற்சியாளர்கள் உட்பட 7 ஊழியர்களை நீக்க வேண்டுமென புதிய நிபந்தனை விதித்தார். இதனை நான் ஏற்க மாட்டேன் என்பதை, அவர் நன்கு அறிவார். பிலார்டோ, கிரண்டோனா ஆகியோர் காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.
அர்ஜென்டினா அணிக்காக அனைத்து வகையிலும் என்னை அர்ப்பணித்துள்ளேன். தற்போதைய அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் மிகப் பெரும் வெற்றிகள் குறித்து கனவு காண தகுதி வாய்ந்தவர்கள்.
இவ்வாறு மாரடோனா கூறினார்.
பயிற்சியாளர் பதவியில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டது குறித்து, அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸ் கவலை தெரிவித்துள்ளார்.
|